Sunday, 30 September 2012



 நாம் கேட்க நினைப்பதெல்லாம்

இந்த அநியாயத்தை தட்டிக்கேட்க
யாருமே இல்லையா” - இந்த குரலுக்கு
யாராவது வரவேண்டும்.

நாம் கேட்க நினைப்பததெல்லாம்
யாராவது கேட்க வேண்டும்.
நாம் செய்ய நினைப்பததெல்லாம்
யாராவது செய்ய வேண்டும்.

நமக்கான எல்லாவற்றிற்காகவும்
யாராவது
எல்லாவற்றையும் தியாகம் செய்து
போராட வேண்டும்.

போராடுபவர்களை விமர்சனம்
செய்வதை தவிர
நாம் என்ன செய்ய போகின்றோம்.

Wednesday, 26 September 2012



விபத்து 

சாலையில் நடந்து வந்த
அவளை ,
வாகனத்தில் கடந்து  சென்ற
நான்தான் பார்த்தேன் என்றால்,-
எதிரில் வந்த அவனுமா
பார்க்க வேண்டும்.

அவன் மருத்துவமனையில்
நான் காவல் நிலையத்தில்.

அவளோ  ஏதுமேயறியாமல்
மறுபடியும்
சாலையிலே...



   

Monday, 24 September 2012

கவசம்

எதிரிகள் என்று 
யாரையும் இதுவரை
நான் அடையாளம்
காணவில்லை.

அதனால்,
என் நெஞ்சுக்கு
கவசம் தேவைபடவில்லை.

கவசம்  தேவைபடுவது
என் முதுகுக்குத்தான்.

Saturday, 15 September 2012

பயிற்சி

எனக்கு விருப்பமானவற்றை
அடிக்கடி பட்டியலிடுவேன்.-அவற்றை
என்னிடமிருந்து சற்று
விலக்கிவைப்பேன்.

என் கண்ணுக்கு பிடித்தவற்றை
காணமாட்டேன்,
செவிக்கு பிடித்தவற்றை
கேட்கமாட்டேன்,
நாவிற்கு பிடித்தவற்றை
உண்ண மாட்டேன்,
மனதிற்கு பிடித்தவருடன்
பேச மாட்டேன்.

பிடித்த உடையை கூட
உடுத்த மாட்டேன்.

காலை எழுந்தவுடன் ஜிம்
இரவு படுக்கும் முன் தம் - இப்படி
என் இதயத்திற்கு இணக்கமான
நல்லவை, அல்லவை
எல்லாவற்றிலிருந்தும்
அடிக்கடி விலகி நிற்ப்பேன்.

உணவு இருக்கும் போது
உண்ணாவிரதம் இருப்பது போல,
விருப்பமானவற்றையே
விலக்க முடிந்துவிட்டால்...
ஏமாற்றத்தை ஜீரனிப்பது
எளிதல்லவா!.