Wednesday, 13 November 2013

பூதம் வேண்டும்

அலாவுதீனின் விளக்கையும்
ஜீ பூம் பா ஜாடியையும்
அருங்காட்சி எங்கும்
தேடுவோம்.-
பூதம் ஒன்று நமக்கு வேண்டும்.

எண்ணியதை
எண்ணியபடி செய்யவும்
எண்ணப்போவதையும்
திண்ணமாக செய்யவும்
பூதம் ஒன்று நமக்கு வேண்டும்.

காலால் சொன்னதை
தலையால் செய்யும்,
சொல்லி முடிக்கும் முன்பே
செய்து முடிக்கும்,
இன்று சொன்னதை
நேற்றே செய்யும்
பூதம் ஒன்று நமக்கு வேண்டும்.

பாட்டிலில் அடைபட்ட
நம்  தலை முறை
தருதலை மனிதனை
விடுதலை செய்வது
நம்மால் முடியாது.

ஜாடியில் அடைபட்ட
பூதத்தையாவது
விடுதலை செய்து
இந்தியாவை
வல்லரசாக ஆக்குவோம்.

அலாவுதீனின் விளக்கையும்
ஜீ பூம் பா ஜாடியையும்
அருங்காட்சி எங்கும்
தேடுவோம்.-
பூதம் ஒன்று நமக்கு வேண்டும்.

Sunday, 3 November 2013

காத்திருப்போம்

விழித்திருக்கும் காரணத்தால்
விரைவாக விடியாது.-
விடியும் வரை காத்திருப்போம்.

காய் முதல் பார்த்திருந்தாலும்
பாய் போட்டு படுத்திருந்தாலும்
பழுக்கும் வரை காத்திருப்போம்.

காத்திருக்கும் காரணத்தால்
சாத்தியிருக்கும் கதவு திறக்காது .-
திறக்கும் வரை காத்திருப்போம்.

மின்னலில்லா வானமா...
ஜன்னலில்லா வீடா...
இன்னலில்லா வாழ்வா ...

எத்தனை முறை தோற்றாலும்
முடிவில்லா முயற்சியோடு
மடியும் வரை காத்திருப்போம்.



Saturday, 2 November 2013


காதல் மொழி

நெஞ்சமெனும் வெள்ளத்தில்
நீந்திடும் அன்னமே
எந்தன் உள்ளத்தை வாட்டுது
உந்தன் எண்ணமே.

காணாத உருவத்தில்
உந்தன் முகம்தான் தெரியுதே
கேட்காத அரவத்தில்
உந்தன் குரல்தான் கேட்குதே.

ஆலமர கிளையிலே
இரட்டை கிளி பேசுதே - அந்த
காதல் மொழி கேட்டுத்தான் -இந்த
ஒற்றை மனம் வாடுதே.

என்  கனவுகள்  யாவையும்
உன் நினைவுதான் ஆளுதே
என் நினைவுகள் யாவிலும்
உன் கனவுதான் வாழுதே

நின் திருமுகம் காணவே
தவம் தான் இருக்கின்றேன்
நின் தேன் மொழி கேட்கவே
சவம் போல் வருகின்றேன்.

உள்ளத்தை உரைத்திடவே
தேடி உனை வருகின்றேன்
தேவி முகம் கண்டவுடன்
ஊமையாகி போகின்றேன்.

நெஞ்சமெனும் வெள்ளத்தில்
நீந்திடும் அன்னமே
எந்தன் உள்ளத்தை வாட்டுது
உந்தன் எண்ணமே.