Thursday, 30 August 2012

சொல்லாமலே..

உரைப்பதற்க்கு முடியவில்லை,
மனதை
மறைப்பதற்க்கு  தெரியவில்லை.

சம்மணம் கட்டிக்கொண்டு,
நீ அமர்ந்திருக்கும்
எம்மனம்,
மறைப்பதிற்கில்லா
அம்மணம்.

எமக்கு
மானத்தை மறைப்பதற்குத்தான்
தேவையேயன்றி,
மனதை மறைப்பதற்க்கு அல்ல  -
கோவணம்.

மனதை காட்டுவதற்க்கு
ஆவணம்
என்பது அவமானம்.

கண் கண்டாலே
என் நெஞ்சரியும்.

உணர்வுகள் உணர்ந்து
கொள்ளபட   வேண்டும்
சொல்லாமலே...

உள்ளங்கள் ஒன்றுபட
வேண்டும்
தன்னாலேயே..

உரைக்கவும் மாட்டேன்
மனதை
மறைக்கவும்  மாட்டேன்.

Sunday, 19 August 2012



சண்டை


சண்டை என்னவோ
அம்மாவுக்கும்  அப்பாவுக்கும் தான்,
ஆனால்...
அடி விழுவதெல்லாம்
குழந்தைகளுக்குத்தான்.  

Saturday, 11 August 2012


காதல் வந்ததே...

சாதத்தில் கூட நாட்டமில்லை
உன்னை சந்தித்த மாதத்திலிருந்து.
சோகத்தில் கூட வாட்டமில்லை
உன்னை சிந்தித்த நேரத்திலிருந்து.

திண்ணையில் நின்று கொண்டு
தென்னையை பார்தால் கூட,
அதில் உன்னை பார்ப்பதாய்
காகிதத்தில் எழுதிவைத்து
அதை கவிதை என்கின்றேன்.

அழுக்கு சட்டை அணிந்து
ஊரையே வலம் வரும் நான்,
இப்போது, வாசலில் நிற்பதென்றாலும்
சலவை சட்டைதான்.

விடியல் பொழுதையே காணாத நான்,
இப்போது,  நீ கோலமிடுமுன்
வாரி சுருட்டி எழுகின்றேன்.

மண் மீது ஆசையில்லை
பொன் மீது ஆசையில்லை
உன் மீது ஆசை கொண்டேன்..
ஆம்...பிதற்றுகின்றேன்.

கடப்பாரையாலும்
அசைக்க முடியாத
என் இதயத்தை,- வெறும் உன்
கடைபார்வையால் அசைத்துவிட்டாய்!.

Tuesday, 7 August 2012


உழவனின்  நிலை 

ஏர பூட்டி சேர சேத்து,
சேத்துகுள்ள நாத்த நட்டு,
நாத்துகுள்ள உயிரை வைத்து, 
பாத்து  பாத்து பயிர் வளர்த்தோம். 
  
நாத்து  பட்டு போகாம ,
பயிர்  காத்தடித்து சாயாம,
கால நேரம் பாக்காம, 
எலி விரட்டி, வெட்டுகிளி விரட்டி
காத்து காத்து பயிர் வளர்த்தோம்.

பூச்சி பாத்து  மருந்தடிச்சு,
நேரம் பாத்து உரம்  போட்டு,
மரம் போல  பயிர் வளர்த்தோம்.
  
விளைந்த  பயிரை 
காய வைத்து,
காய்ந்த பின்னே  கதிர் அறுத்து,
அறுத்த பயிரை கதிரடிச்சு,
பதர் பிரிச்சு, நெல் பொறுக்கி-
அடுக்கி  வைத்தோம் மூட்டை  கட்டி.

அதை அத்தனையும்  யாருக்கோ
வண்டி  ஏத்தி 
அனுப்பி நின்னோம்  கையை கட்டி. 
---------------------------------------------------------
 உமிழ் நீர் விழுங்கியே,- எங்கள் 
 உயிர்  வளர்த்தோம்.
 கண்ணீர் விட்டே,-நாங்கள் 
 பயிர் வளர்த்தோம்.
 அதை  நன்றாய் தின்றே ,- நீங்கள் 
 வயிறு  வளர்த்தீர்.
 அழுது அழுது  உழுதவனுக்கோ...
 ஒரு முழம்   கயிறு தந்தீர்.                          

Thursday, 2 August 2012



 குழந்தையின் மனது 

'' நீ நல்லா படிச்சி,
  பெரியவனாகி,
  நிறைய சம்பாதித்து ...."-

  தந்தை முடிப்பதற்குள்,
  குழந்தை சொன்னது,-

 '' நிறைய பொம்மைகள் 
  வாங்குவேன்" - என்று.