Saturday, 28 July 2012


கைகள் இரண்டும்
பிணைந்தே  இருப்போம்.-
தோளின் மீது  கைகள்
போட்டே நடப்போம் .-
என்னை,- நீ தாங்கு,
உன்னை,- நான்  தாங்குகிறேன்.

அஞ்சாதே ...
கண் துஞ்சாதே ....

வீழ்ந்துவிடுவோம்  என்று
எண்ணியவர்கள்  எல்லாம்
வியந்து போகவேண்டும்.

மானம்தான் பெரிது.-
வேட்டியை இறுக்கி கட்டு.-
புறப்படு ...

இன்றாவது,
சாக்கடைக்குள் வீழ்ந்துவிடாமல்
வீட்டுக்குச்செல்வோம் .

....போதை நண்பர்கள் .



Thursday, 12 July 2012



அன்றுதான் அவளை
முதலில் பார்த்தேன்.

ஏனோ... அவள் முறைத்தாள்.
மறுநாளே சிரித்தாள்.

அடுத்தடுத்த நாட்களில்...

வழிந்தாள்,
பழித்தாள்.

கெஞ்சினாள்,
கொஞ்சினாள்.

தினமும் ஒரு முகம் காட்டுகின்றாள் -
யாருடனோ
செல்போனில் பேசிக்கொண்டு போகையிலே!



Tuesday, 10 July 2012

மொழி

"தமிழ் மட்டும் பத்தாதுடா, 
 உம் மவனுக்கு 
 இந்தியும் சேத்து 
 சொல்லி கொடு "

"இந்தி படிச்சா.., 
 இந்தியாவுக்குள்ள மட்டுந்தான்,
 இங்லீச  சொல்லி கொடு "

"இங்லீச வெச்சிகிட்டு 
 ஐரோப்பா  போகமுடியுமா...?"

" ஜப்பான் போவனும்னா  ..,
  சைனா   போவனும்னா..."

"சைலன்ட்... "- கதவை திறந்து கொண்டு 
 நர்ஸ் வந்தாள்.
"குழந்தய  பார்கிரவங்கெல்லாம்   
 வாங்க"

Monday, 9 July 2012



குடி

புத்தி கெட்டு, சக்தி கெட்டு,
குடல் கெட்டு, உடல் கெட்டு,
குடி கெட்டு, குலமும் கெட்டு,

ஊர் வெறுக்கும் பேர் ஆகி,
தாயும் வெறுக்கும் சேய்யாகி, -

மண்னாகி முடியும், -
அரிய
இந்த மாந்தர் பிறவி.

என்று மடியும்...
இந்த குடியின் தாகம்.


அரிதல்ல அரிதல்ல...


அரிதல்ல அரிதல்ல மானிடராய்
பிறப்பது அரிதல்ல.
மானிடராய் பிறந்தவர் மானிடராய்
வாழ்வதே அரிது.

பயிர்களுக்கு மத்தியிலே
களை வளர்வது அரிதல்ல,
களைகளுக்கு மத்தியிலே
பயிராக  வளர்வதே அரிது.

உறவு என்று கூறி
கை கொடுப்பது அரிதல்ல,
அவர்தம்  உயர்வுக்கும்
கை கொடுப்பதே அரிது.

வாழ்ந்து முடிந்த பின்
சாவது அரிதல்ல,
செத்து மடிந்த பின்னும்
வாழ்வதே அரிது.

பறவையை போல்
வானத்தில் பறப்பது அரிதல்ல
மீனை போல்
தண்ணீரில் நீந்துவது அரிதல்ல
தரையிலே மனிதனாக
நடப்பதே அரிது.

அரிதல்ல அரிதல்ல மானிடராய்
பிறப்பது அரிதல்ல.

Thursday, 5 July 2012

பட்டாசு

அன்று...
நான் கேட்டும்
எனக்கு வாங்கிக்கொடுக்காத -
என் தந்தை,

இன்று...
நான் தடுத்தும் - என் மகனுக்கு
வாங்கித்தருகிறார்.


காசை ஏண்டா இப்படி
கரியாக்குகிறாய் -
என்று, - அப்பா
எப்பவோ சொன்னது -

ஞாபகம் வருகிறது - என் மகன்
 பட்டாசு வெடிக்கையிலே...

மாலை நேரத்து
மயக்கத்தில்,-
தேவதை, - என்று
அழைத்தவன்,

காலை நேரத்து
தெளிவில்,-
கேட்கிறான்...

“நீ மனுசியா”...

Wednesday, 4 July 2012

பாலோடு கலந்துவிட்ட
தண்ணி போல்,
என்னோடு கலந்துவிட்ட
உன்னை,
யாராலும் பிரிக்கமுடியாது
என்றேனே...

அன்னமாக வளர்ந்து
வருகிறாளே
உன் தங்கை!...
திருமணம்

புதிதாக திருமணம்,-
புதிதாக மாமனார், புதிதாக மாமியார்.
புதிதாக என்னை ஒருவன்
மாமா என்கிறான்,
நான் ஒருவனை
மாமா என்கிறேன்.

புதிய இடம், புதிய வேடம்.

மனைவி புதிது,
கட்டில் புதிது,
வந்த உறவுகள் எல்லாம் புதிது,
வரும் இரவுகள் எல்லாம் புதிது.

புதிது, புதிது எல்லாமே புதிது...
இந்த விருந்து புதிது,
உபசரிப்பு புதிது,
மரியாதை புதிது.

ஆனால்...
எனக்கு நான் பழையவன் தானே.

என்னில்,
என் கண்ணில்,
என்றும் உன் பழைய நினைவுகள்தான்.


நினைவுகள்

உன் நினைவுகளை
ஞாபகப்படுத்தும் எல்லாவற்றையும்
அழித்துவிட்டேன்.

மிச்சமிருப்பது...
உன் நினைவுகள் மட்டும்தான்.
விசுவாசம்


 ரப்பர் பல்லிகே
 பயந்தவன்தான்,

 எஜமானின் ஆணை
 என்றால்,
 நிஜமான யானையையே
 அடிப்பான்.



அழகு ஒத்துப்போக வேண்டும்
அந்தஸ்து ஒத்துப்போக வேண்டும்

நிறம் ஒத்துப்போக வேண்டும்
தரம் ஒத்துப்போக வேண்டும்

உயரம் ஒத்துப்போக வேண்டும்
உதிரம் ஒத்துப்போக வேண்டும்

ஆனால்...

திருமணம் மட்டும்
ஆணுக்கும் பெண்ணுக்கும்.

Tuesday, 3 July 2012

கண்ணா என்றாள்
கண்ணே என்றேன்.

மன்னா என்றாள்
மணியே என்றேன்.

அண்ணா என்றாள்
ச்சீ... நீ பெண்ணா என்றேன்.

ஒரு தீபாவளி முடிந்த பின்பு... சொன்னார்கள்

அம்மா சொன்னாள்
துணி கடையில் ஏக கூட்டமென்று

பாட்டி சொன்னாள்
பலகார கடையில் ஏக கூட்டமென்று

பொண்ணு சொன்னாள்
வளையல் கடையில் ஏக கூட்டமென்று

பையன் சொன்னான்
வெடி கடையில் ஏக கூட்டமென்று

தாத்தா சொன்னார்
பொடி கடையில் ஏக கூட்டமென்று

ஆனால்...
அப்பா மட்டும் சொல்லவேயில்லை
வட்டி கடையிலும் ஏக கூட்டமென்று
அறிவு

பறட்டை தலையாய் இருக்கிறதே
என்று சுருட்டை தலையை பார்த்து
ஆசைப்பட்டேன், -
தலை கருப்பாக இருந்த போது.

பறட்டை தலையோ, சுருட்டை தலையோ
கருத்த தலையை பார்த்து
ஆசைப்பட்டேன், -
தலை வெளுத்த பின்பு.

கருப்போ, வெளுப்போ
கேசம் உள்ள தலையை
நேசமுடன் பார்த்தேன்,-
தலை வழுக்கையான பின்பு.

இப்போது
எந்த தலையையும் பார்த்து
ஆசை படுவதில்லை, - என்
வழுக்கை தலைக்கும் ஏதேனும்
ஆபத்து வந்துவிடுமோ என்று
பயந்துகொண்டு.

Monday, 2 July 2012


செய்யாமல் சாகாதே.

உணர்ச்சி என்பது
புணர்சியின் போது மட்டும்
இருந்தால் போதும் என்று
எண்ணிவிட்டாயா?

உன் வீரத்தையும்
தன்மானத்தையும்
எங்கேனும் வைத்துவிட்டாயா
அடமானம்.

உணவில்லாமல்
சாவதை காட்டிலும்,
உணர்வில்லாமல்
சாவதே அவமானம்.

செய் அல்லது செத்துமடி 
என்று சொன்னது
செய்யாமல் சாவதற்கு அல்ல,
சாவதற்கு முன்
செய்வதற்கு.

செய்யாமல் சாகாதே.




எல்லாவற்றிலும் எருமையைபோல்
இருப்போம்.,-
மழைபெய்தால் மட்டும்
குடைகேட்போம்.

குடைக்குள் எருமை.


                                                        

கல்யாணம் ஆகாதவன்

மீசை முளைக்கும் முன்பே 
ஆசை முளைத்தது.
மீசை நரைத்து விட்டது
இன்னும் ஆசை நரைக்கவில்லை.

நான் ஒன்றும் காமுகன் அல்ல
இன்னும் கல்யாணம் ஆகாதவன்.

என் கல்யாணமான நன்பர்களோ,
“கல்யாணமானவனுக்கு 
ஒரு பொண்டாட்டி
கல்யாணமாகதவனுக்கோ 
பல பொண்டாட்டி”- என்று 
என் ஒழுக்கத்தை 
வேடிக்கை பேசுகிறார்கள்.

என் ஒழுக்கத்தை பற்றி
பெருமை பேசிய 
என் அம்மா கூட,
“ஒரு பெண்ணை இழுத்துக்கொண்டு
ஓடிவர துப்பில்லை”  என்கிறாள்.

என்ன செய்வது...
பாதி பெண்களை கருவிலேயே 
கொன்றுவிட்டோம்.
தப்பித்தவர்கள் எல்லாம்
இப்போது 
தாக்குகிறார்கள்.

எனக்குபிடித்த எந்த பெண்ணுக்கும்
என்னை பிடிக்கவில்லை.,
எனக்கு பிடிக்காத
எந்த ஒரு பெண்ணுக்கும் கூட
என்னை பிடிக்கவில்லை

அவர்களுக்கு
இறக்குமதியான அல்லது ஏற்றுமதிக்கு
தகுதியான ஆண்கள்தான்
வேண்டுமாம்.

உலகமய மாக்கலினால்
பாதிக்க பட்ட
பட்டியலில்
என் கல்யாணத்தையும்
சேர்த்துக்கொள்ளுங்கள்.