Monday, 7 December 2015



கற்க கசடற...

இன்னாத  வைகளை எல்லாம்
எண்ணாதவனாகத்தான்
இருந்தேன்.

அல்லாத சொற்களை எல்லாம்
மெல்லாதவனாகத்தான்
இருந்தேன்.

எரிந்துவிழும் குணங்களை எல்லாம்
தெரிந்து கொள்ளாதவனாகத்தான்
இருந்தேன்.

ஒழுங்கின்மைகளை எல்லாம்
சகித்து  கொள்ளாதவனாகத்தான்
இருந்தேன்.

இந்த பொல்லாத வைகளை எல்லாம்
கல்லாதவனாகத்தான்
இருந்தேன்.

இன்னமும் என்னவெல்லாம்
கற்க வேண்டுமோ....
இந்த உலகத்தோடு ஒன்றி வாழ.

Saturday, 8 August 2015

மதியாரை இனம் காண்

மதியாரை இனம் காணும்
அதி மதியே வெகுமதி.
மதியாத மனிதர்களை
உதறுவதே மரியாதை.

ஒட்டாத கூட்டத்துடன்
ஒட்டாதிருப்பதே நல்ல பயன்.
செல்லாத காசுகளை
சேர்த்துவைத்து என்ன பயன்.

பண்பாடு  இல்லாரோடு
வேண்டாம்  உடன்பாடு.
பாம்போடு சேர்ந்திருத்தல்
இயலாத பெரும்பாடு.

பண்பின்றி நடப்போரின்
முகம் காணாது விலகு.
மானமுள்ள மனிதருக்கு
அதுவே  அழகு.

மெய்யான பொய்யர்களை
குப்பையில் போடு.
நோவுக்கும் செல்லாதே
அவர்தம் சாவுக்கும் செல்லாதே.

Saturday, 16 May 2015

மகிழ்வு

நினைத்ததெல்லாமே நடந்தது
கேட்டதெல்லாமே கிடைத்தது
முயன்றதெல்லாமே முடிந்தது.

விரும்பிய கல்வி ,
விரும்பிய வேலை.
அருளுக்கும்  குறைவில்லை
பொருளுக்கும் குறைவில்லை.

எந்த வெற்றிக்கும் வேள்வி இல்லை
தோல்வி என்று  கேள்வியே இல்லை.

உதாசினபடுத்தாத உறவினர்கள்
ஏமாற்றம் தராத நன்பர்கள்
குதறி  எடுக்காத  குடும்பத்தினர்.

எவருக்கு  கிடைக்கும்
இந்த வாழ்வும்,இந்த யோகமும்.
எல்லாமே என் பாக்கியம்!

இந்த  பகல் கனவுகளே
நம் மகிழ்வுக்குத்தானே...


Sunday, 1 February 2015


திரு. நங்கை

'அரிது அரிது மானிடராக
பிறப்பதறிது'-
மானிடராகத்தான்  பிறந்தேன்...

'கூன் குருடு செவிடு பேடு
நீங்கிப் பிறத்தல் அரிது'-
நலமாகத்தான் பிறந்தேன்..

ஆம்..
ஆணாக  பிறந்தேன்
ஆனால்..
பெண்ணாக வளர்ந்தேன்.

அழியாத வலியுடன்
பாலினம் தொலைந்து
அலியாக  அலைந்தேன்.

அண்ணன் என்று அழைத்தவனை
அக்கா என்று அழைக்க
மறுத்தான் தம்பி.
மகனாக பெற்றவனை
மகளாக ஏற்க
மறுத்தாள் தாய்.
எதுவும் புரிய மறுத்து
தவித்தேன் நான்.

சமுதாயம்  என்னை ’வாடி’ என்று
அழைத்த போதுதான்
நான் ஓடி போனேன்.
தேடிவர யாருமில்லை
என்றபோது
வாடி போனேன்.
ராஜா என்ற நான்
ராணியாக மாறி போனேன்.

வேலைக்கா வீதி வீதியாக
அலைந்தேன்.
சேலை அணிந்த ஆணுக்கு
வேலையில்லை என்றார்கள்.

ஆம் ...
சேலை அணிந்த ஆணுக்கு
பகலிலே
வேலையில்லை என்றார்கள்
திரு.நல்லவர்கள்.