Thursday, 10 January 2013


 எதற்கு இந்த பொங்கல் பண்டிகை

நெற்கள் விளைந்த வயல்களில்
புற்களைகூட காணமுடியவில்லை,-
இப்போது எதற்கு இந்த
பொங்கல் பண்டிகை.

யானையை கட்டி போர் அடித்தவர்கள்
ரேசன் கடைகளிலே
இலவச அரிசிக்காக
பூனையை போல்  நிற்க்கையிலே,-
இப்போது எதற்கு இந்த
பொங்கல் பண்டிகை.

பஞ்சு விழுந்த கண்களுடனும்
கூடு விழுந்த நெஞ்சுடனும்
கஞ்சி காணாத வயிறுடனும்
கிழவர்கள் மட்டுமே
இன்னமும் உழவர்களாக இருக்கையிலே
இப்போது எதற்கு இந்த
பொங்கல் பண்டிகை.

உழவர்களின் கண்களிலே
ஏக்கம் எரிமலையாய்
பொங்கிக்கொண்டிருக்கும் வேளையிலே
சட்டிபானையில் என்ன வேண்டிகிடக்கிறது
சக்கரை பொங்கல்.

முதலில் தினசரி பொங்கலுக்கு
வழி பிறக்கட்டும்
அப்புறம் கொண்டாடுவோம்
ஆயிரமாயிரம் விழா பொங்கல்
ஆனந்தமாய்.