சாமியே நீயே சொல்லு
வாழ பிடிக்காதவனுக்கு
சாக வழியிருக்கு,
சாக பிடிக்காதவனுக்கு
வாழ வழியிருக்கா? -
சாமியே நீயே சொல்லு.
விரும்பி பிறக்கவில்லை
என்றாலும் வாழ்கின்றோம்,
விரும்பி சாகவில்லை
என்றாலும் சாகின்றோம்.
ஆனால்..
வாழ்ந்து முடிந்தபின் சாவதா
அன்றி
வாழமுடியாமல் சாவதா? -
சாமியே நீயே சொல்லு.
காற்றும் நீரும், செடியும் பயிரும்,
நிறைந்த பூமி வாழத்தானே? -
அன்றி
சாக புதைக்கவா? -
சாமியே நீயே சொல்லு.
வாழ நிலமில்லாமல், வாழ வழியில்லாமல்
இந்த அகண்ட பூமியிலே பிறப்பெதற்கு?-
சாமியே நீ எதுவுமே சொல்ல வேண்டாம்
படைப்பதையே நிறுத்து.
ஆயிரமாயிரம் கிரகங்கள் இருக்கு,
அதோடு பூமியும் இருந்து தொலைக்கட்டும்-
ஜீவராசியில்லா
மலட்டு கிரகமாய்.
