Saturday, 20 October 2012

ஏழைக்கு ஏற்ற காலம்

மயிலுக்கு வேண்டுமானால்
மழை பிடிக்கும்
ஏழை எங்களுக்கு
வெயில்தான் பிடிக்கும்.

வீட்டுக்குள்லேயே நனைகின்றோம்
தொப்பலாக,
இந்த மழையிலே
வீடே மிதக்கின்றது கப்பலாக.

எங்கள் குடையே வீடுதான்
அந்த கோடையிலே,
ஆனால் ...
எங்கள்  வீட்டுக்கே குடை வேண்டும்
இந்த மழையிலே.

காய்ந்து கிடந்தாலும்
ஓய்ந்து வீட்டுக்கு வந்தால்,
சாய்ந்து கொள்ளவாவது
இடமுண்டு  அந்த கோடையிலே.

வீட்டுக்குள்ளே குடைபிடிக்கும்
இந்த மாரி காலத்தைவிட,-

குளித்துவிட்டு வருவதற்குள்
துவைத்து வைத்த
நைந்துபோன எங்கள்
துணி காய்ந்திருக்கும்
அந்த கோடை காலம்தான்
ஏழை எங்களுக்கு ஏற்ற காலம்.

மயிலுக்கு வேண்டுமானால்
மழை பிடிக்கும்
ஏழை எங்களுக்கு
வெயில்தான் பிடிக்கும்.