Monday, 2 July 2012


கல்யாணம் ஆகாதவன்

மீசை முளைக்கும் முன்பே 
ஆசை முளைத்தது.
மீசை நரைத்து விட்டது
இன்னும் ஆசை நரைக்கவில்லை.

நான் ஒன்றும் காமுகன் அல்ல
இன்னும் கல்யாணம் ஆகாதவன்.

என் கல்யாணமான நன்பர்களோ,
“கல்யாணமானவனுக்கு 
ஒரு பொண்டாட்டி
கல்யாணமாகதவனுக்கோ 
பல பொண்டாட்டி”- என்று 
என் ஒழுக்கத்தை 
வேடிக்கை பேசுகிறார்கள்.

என் ஒழுக்கத்தை பற்றி
பெருமை பேசிய 
என் அம்மா கூட,
“ஒரு பெண்ணை இழுத்துக்கொண்டு
ஓடிவர துப்பில்லை”  என்கிறாள்.

என்ன செய்வது...
பாதி பெண்களை கருவிலேயே 
கொன்றுவிட்டோம்.
தப்பித்தவர்கள் எல்லாம்
இப்போது 
தாக்குகிறார்கள்.

எனக்குபிடித்த எந்த பெண்ணுக்கும்
என்னை பிடிக்கவில்லை.,
எனக்கு பிடிக்காத
எந்த ஒரு பெண்ணுக்கும் கூட
என்னை பிடிக்கவில்லை

அவர்களுக்கு
இறக்குமதியான அல்லது ஏற்றுமதிக்கு
தகுதியான ஆண்கள்தான்
வேண்டுமாம்.

உலகமய மாக்கலினால்
பாதிக்க பட்ட
பட்டியலில்
என் கல்யாணத்தையும்
சேர்த்துக்கொள்ளுங்கள்.